தேசிய கட்சிகளுக்கு எதிரான அலை கர்நாடகத்தில் நிலவுவதால், வரும் பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெறும் என அக் கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு எலஹங்கா அருகே சர்வதேச விமான நிலையச் சாலையில் செவ்வாய்க்கிழமை பிப். 17-ஆம் தேதி நடைபெற உள்ள மஜத மாநாட்டுக்கான பந்தல் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியது:
பெங்களூரு சர்வதேச விமான நிலையச் சாலையில் பிப். 17-ஆம் தேதி மஜத கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு சவால்விடும் வகையில் பிரமாண்டமாக நடைபெறும். மாநாட்டில் மஜத ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆட்சியால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் அக்கட்சிகளுக்கு எதிரான அலை உள்ளது. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பது உறுதி என்றார்.
பேட்டியின் போது, மஜத இளைஞரணித் தலைவர் மதுபங்காரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.