இதய நோயால் பாதிக்கப்பட்ட செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த 10 வயது சிறுவன், 3 மாத சிறுமிக்கு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு நாடு திரும்பினர்.
இது தொடர்பாக மியாட் மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ராபர்ட் கொயல்லோ, மருத்துவமனைத் தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
குழந்தை ரிவானா பிறந்தபோது சுவாசிப்பது, தாய்ப்பால் குடிப்பதில் சிரமம், துரித இதயத் துடிப்பு பிரச்னைகள் இருந்தன. அந்நாட்டு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டபோது, ரிவானா உயிருக்கு ஆபத்தான இதய பாதிப்புகள் இருப்பது தெரிந்தது. இதய தடுப்புச் சுவர் இல்லாததால் பிராண வாயுவைக் கொண்ட ரத்தம் கலக்கும் பாதிப்பு சிக்கலும் இருந்தது.
சிறுவனுக்கு வால்வு பாதிப்பு: இதய வால்வு பாதிப்பு காரணமாக சிறுவன் ஆஞ்சலோ அனுமதிக்கப்பட்டார். செஷல்ஸ் அரசின் உதவியுடன்... சென்னை மியாட் மருத்துவமனையில் குழந்தை ரிவானா மற்றும் சிறுவன் ஆஞ்சலோ ஆகியோர் சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்ய செஷல்ஸ் அரசு முன் வந்தது. இதையடுத்து இருவரும் அண்மையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை ரிவானாவின் இதய பாதிப்பு சிக்கல்களை நீக்க தொடர்ந்து 5 மணி நேரமும் சிறுவன் ஆஞ்சலோவின் இதய வால்வு பிரச்னையைத் தீர்க்க தொடர்ந்து 4 மணி நேரமும் இதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இருவரும் முழுமையாகக் குணமடைந்து செஷல்ஸ் நாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினர்.