ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, எம்பார் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், ரூ. 77 லட்சம் மதிப்பிலான தங்கக் குடம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
சுங்குவார்சத்திரத்தை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் அவதரித்தவர் எம்பார். ராமானுஜருக்கு சகோதர முறை உறவினரான இவர், அவருக்கு உறுதுணையாக இருந்து, அவரை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றியவராகக் கூறப்படுகிறது. ராமானுஜரால் எம்பெருமானார் எனப் பெயரிடப்பட்ட சிறப்புக்குரியவர்.
ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு எம்பார் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், ரூ. 77 லட்சம் மதிப்புள்ள தங்கக் குடம் காணிக்கையாக வழங்க முடிவு செய்யப்பட்டு, காணிக்கை வழங்குவதற்காக மதுரமங்கலம் பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் எம்பார் புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு காலை 10 மணிக்கு எம்பார் வந்தடைந்தார். இதையடுத்து நடந்த மங்களாசாசன நிகழ்ச்சியில் தங்கக் குடம் கோயில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, மதியம் 1 மணி அளவில் ராமானுஜருக்கும், எம்பாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று, மாலை வீதி உலாவும், இரவு ராமானுஜரிடம் பிரியாவிடை பெற்று எம்பார் மதுரமங்கலத்துக்கு புறப்பட்டார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.