மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் ஊராட்சியில் சுதந்திரதினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ நெல்லிகுப்பம் புகழேந்தி பங்கேற்றார்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்ற செயலர் ராஜசேகர் வரவேற்றார். மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி தலைமை வகித்தார்.
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ நெல்லிகுப்பம் புகழேந்தி பங்கேற்றார். நிகழ்ச்சியில் மதுராந்தகம் வட்டாட்சியர் ஆ.கௌசல்யா, சிலாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை சௌமியா, திமுக ஒன்றியச் செயலர் எண்டத்தூர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிலாவட்டத்தை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக இலக்கை எட்டுதல், அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல், நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.