காஞ்சிபுரம் கவரைத் தெருவில் உள்ள பி.எஸ்.சீனிவாசா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா புத்தகங்கள், புத்தகப் பைகள் எரிந்து சாம்பலாயின.
காஞ்சிபுரம் கவரைத் தெருவில் பி.எஸ். சீனிவாசா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அருகில் ராணி அண்ணாதுரை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்டவை இங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 10 பேர் போராடித் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த விலையில்லா புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பாலாகின.
இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் வரும் சமூக விரோதிகள் சிலரால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.