இணையதள சேவைக் கட்டணம் வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராமமூர்த்தி, அமைப்புச் செயலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், இணையதள சேவைக் கட்டணம் வழங்க கோருதல், துணை வட்டாட்சியர், துணை வளர்ச்சி அலுவலர்களை போன்று தனி ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
அதுபோல், உள்பிரிவு பட்டா மாறுதலில் முன்பு இருந்த நடைமுறையை கடைப்பிடிக்கும் வகையில் அரசு ஆணை வழங்க வேண்டும்.
அம்மா திட்ட செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்குதல், பணிக்கிராமத்தில் குடியிருக்க வலியுறுத்துவதைத் தளர்வு செய்தல், சொந்த மாவட்டத்துக்கு பணி மாறுதல், இலவச சிம்கார்டு ஆகியவற்றுக்கு அரசு ஆணை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில், கிராம நிர்வாக முன்னேற்றச்சங்க நிர்வாகிகள் முருகேசன், ராஜேந்திரன், பிரபாகரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.