செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளையும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இச்சங்கத்தின் 12-வது மாவட்ட மாநாடு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் திருக்கழுகுன்றத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வி.தமிழரசி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மீனா சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். துணைச் செயலாளர் வி.ஜெயந்தி வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.ராணி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.
மாநாட்டில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வட்ட தலைமை மருத்துவமனைகளையும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை முறையாக பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுத்தி வைத்துள்ள முதியோர், விதவை, ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் மாத உதவித்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகளாக தலைவர் வி.தமிழரசி, செயலாளர் பா.ஜெயந்தி, பொருளாளர் ஆர்.செளந்தரி, துணைத் தலைவர் களாக வா.பிரமிளா, டி.பிரேமா ஆகியோரும், மாவட்ட துணைச் செயலாளர்களாக கலையரசி, ஜோஸ்பின்விஜி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.