செங்கல்பட்டு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு போலீஸார் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற இளைஞர் ஒருவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், உத்தரமேரூர் வட்டம், திருப்புலிவனம் பகுதியைச் சேர்ந்த ருத்ரா என்கிற ருத்ரகுமார் (23) என்பதும், இவர் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், ருத்ரகுமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.