வாலாஜாபாத் அருகே தலித் சமூக மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி அவரது உறவினர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாலாஜாபாதை அடுத்த திருவங்கரணை காலனியில் வசிப்பவர் செல்வம். இவரது மகன் ராஜ்குமார். இவர் திருவங்கரணையில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அங்குள்ள மரத்தில் ராஜ்குமார் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் மணிமாறன், சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்குமார் உறவினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை முன்னணி நிர்வாகிகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன் வியாழக்கிழமை
குவிந்தனர்.
அப்போது, பிரேத பரிசோதனையை மருத்துவர்கள் குழு முன்னிலையில் விடியோ எடுக்க வேண்டும், கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும், ராஜ்குமார் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என கோரி காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விஷ்ணுகாஞ்சி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.