உத்தரமேரூர் அருகே ரெட்டமங்கலம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
உத்தரமேரூர் வட்டம், ரெட்டமங்கலம் ஊராட்சிப் பகுதியில் அரசு மதுபானக் கடை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது திறக்கப்படும் மதுபானக்கடையின் அருகில், அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி ஆகியவை உள்ளன.
இதில், 1,300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதுபோல், தனியார் நிறுவனம் ஒன்றில், 600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இதன் அருகிலேயே, குடியிருப்புகள், தொழிற்சாலை, தனியார் பொறியியல் கல்லூரி ஆகியவையும் உள்ளன. இதனால், அப்பகுதி வழியாகச் சென்று வரும் பெண்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் பாதிக்கப்படுவர். மேலும்,திறக்கப்படவுள்ள மதுபானக்கடைக்கு அருகிலேயே ஏரி நீர்ப் பிடிப்பு பகுதி, குளம், நீர்வரத்துக் கால்வாய் ஆகியவை உள்ளன.
எனவே, மதுபானக் கடையை அப்பகுதியில் திறக்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.