ஒரகடம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், பேருந்து ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து சுமார் 40 பயணிகளுடன் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சாதர்சந்தர் சிங் (50) ஓட்டிச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரகடத்தை அடுத்த குன்னவாக்கம் பகுதியில் பேருந்து வந்தபோது சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர் சாதர்சந்தர் சிங் பலத்த காயமடைந்தார். மேலும், பயணிகள் 5 பேர் லேசான காயமடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாதர்சந்தர் சிங் இறந்தார்.
இதுகுறித்து ஒரகடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.