ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாணவர் மன்ற உறுப்பினர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மாணவர் மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய மாணவர் மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் 20 பேரும் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். மையத்தின் இயக்குனர் எம்.எம்.கோயல் முன்னிலையில், மாணவர் நலத் துறை மற்றும் மாணவர் மன்றத்தின் தலைவர் டாக்டர் கிரிசன் உறுதிமொழியை முன்மொழிய அவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில், மையத்தின் கல்வி அலுவல் துறைத் தலைவர் வசந்தி ராஜேந்திரன், பாலின கல்வித் துறை தலைவர் கோபிநாத் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.