காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே லாரி மீது, கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவ, மாணவிகள் 60 பேர் காயமடைந்தனர்.
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களை தீபாவளி விடுமுறைக்காக கல்லூரி பேருந்தில் அவர்களின் சொந்த ஊருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர்.
அதன்படி, 60 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு, திருத்துறைப்பூண்டி நோக்கி கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது.
செங்கல்பட்டை அடுத்த இருங்குன்றம் பள்ளி அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், பேருந்தில் இருந்த அனைத்து மாணவ, மாணவிகளும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.