டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தேங்கியிருந்த குப்பைகளை பேரூராட்சி பணியாளர்கள் திங்கள்கிழமை அகற்றினர்.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி துப்பரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
இதில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மருத்துவமனை முழுவதும் கொசுமருந்து அடிக்கப்பட்டது. இப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்திய பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா, நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி, டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
இதில் மருத்துவர் ஜெயபாரதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.