90-வது கலங்கரை விளக்க தினத்தையொட்டி, மாமல்லபுரம் கலங்கரைவிளக்கத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக புகழ்பெற்று விளங்கிவரும் மாமல்லபுரத்தில் ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்சுணன் தபசு உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப்பார்க்க இந்திய மக்கள் தலா ஒருவருக்கு ரூ. 30, வெளிநாட்டினருக்கு தலா ஒருவருக்கு ரூ. 500-ம் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கலங்கரைவிளக்கத்தை சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தில் 90- வது கலங்கரைவிளக்க தினத்தையொட்டி, அங்குள்ள கலங்கரைவிளக்கத்துக்குச் செல்வதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அங்கு இலவசமாகச் சென்று பார்த்தனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை பாராமரிக்கும் வசந்த் கூறுகையில், மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களைப் பார்க்க தொல்லியல் துறையினர் தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர்.
கலங்கரைவிளக்கத்துக்கு சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு வாங்கிய பின், கலங்கரைவிளக்கம் மற்றும் அதற்குள் இருக்கும் மியூசியத்தை பார்க்க முடியும்.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறியவர்களுக்கு ரூ. 3-ம் , பெரியவர்களுக்கு ரூ. 10-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 25-ம், கேமரா கட்டணம் ரூ. 20 என கட்டணம் உள்ளது.
இந்த ஆண்டு கலங்கரைவிளக்கம் தினத்தையொட்டி, இயக்குநர் முடிவெடுத்து தமிழ்நாட்டில் உள்ள பழவேற்காட்டில் இருந்து கன்னியாகுமரி வரை 24 கலங்கரை விளக்கங்கள் உள்ள இடங்களுக்கும் வியாழக்கிழமை அனுமதி இலவசம் என அறிவித்ததையடுத்து, நாங்கள் சுற்றுலாப் பயணிகள் யாரிடமும் கட்டணம் வசூல் செய்யவில்லை.
இதனால் ஏராளமானோர் இலவசமாக பார்வையிட்டுச்சென்றனர் என்றார்.