குற்ற வழக்குகளில் தொடர்புடைய 232 வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ரூ. 4.18 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், சோமங்கலம், ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருடக்கணக்கில் காவல் நிலையங்களில் தேங்கி கிடந்தன. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் காவல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் வாகனங்களை ஏலம் விட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அரசு தானியங்கி பொறியாளரால் அண்மையில் வாகனங்கள் மதீப்பீடு செய்யப்பட்டன. இதையடுத்து, அந்தந்த காவல் நிலைய வளாகங்களில் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில், டிஎஸ்பி சிலம்பரசன் முன்னிலையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் 70, சோமங்கலம் 24, ஒரகடம் 19, மணிமங்கலம் 64, சுங்குவார்சத்திரம் 55 என மொத்தம் 232 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த 232 வாகனங்களுக்கும் அரசு நிர்ணயித்த தொகை ரூ. 3 லட்சத்து 83 ஆயிரத்து 800 ஆகும். அவை ஏலம் விடப்பட்ட தொகை ரூ 4 லட்சத்து 18 ஆயிரத்து 350 என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீத வரியும், லாரி, வேன் போன்றவற்றுக்கு 18 சதவீத வரியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டது. ஏலத்தில் காவல்துறை ஆய்வாளர்கள் நடராஜன், அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.