காஞ்சிபுரத்தில் ஆசிரியையிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
காஞ்சிபுரம் வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் சிவசக்தி (50). இவர் அருகிலுள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். இவரும், இவரது மகளும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு மொபெட்டில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இருவரும் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், சிவசக்தியிடம் அருகே திடீரென நெருங்கி வந்துள்ளனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்திருந்த நபர், சிவசக்தி அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.