காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் பிப்ரவரி 15-ஆம் தேதி மயான கொள்ளை திரு விழா நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரிக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில் அங்காளம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, பெரிய காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம், ஜவாஹர்லால் காய்கறி அங்காடி, மேலபிள்ளையார் பாளையம் செங்குந்தர் நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் மயான கொள்ளை திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்காள பரமேஸ்வரி கோயில்களில் புதன்கிழமை மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சிவலிங்க பூஜையுடன் வீதி உலா நடைபெற்றது.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிம்ம வாகன வீதியுலா, வெள்ளிக் கவசம், மயான கொள்ளை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அந்தந்த அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்களில் விமரிசையாக நடைபெறவுள்ளன.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, வீதியுலா, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.