ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ மங்களஈஸ்வரி சமேத ஸ்ரீ மலையப்பதாசர் கோயில் கும்பாபிஷேக விழா மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த ஸ்ரீ மங்கள ஈஸ்வரி சமேத ஸ்ரீ மலையப்பதாசர் இக்கோயிலை அப்பகுதி பொதுமக்கள் சீரமைத்தனர். திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ மங்களேஸ்வரி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதையடுத்து கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் செவ்வாய்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து மஹாலஷ்மி ஹோமம், விக்னேஸ்வர பூஜையும் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், முதற்கால யாக பூஜை மற்றும் முதற்கால யாக வேள்வி விசேஷ திரவிய ஹோகமும் நடைபெற்றன. புதன்கிழமை காலை கோபூஜை, இரண்டாம் கால யாகபூஜையுடன் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் புனித நீரை சிவலிங்கத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதையடுத்து மகா தீபாராதனையும் அன்னதானமும் நடைபெற்றது. இதில் பம்மல் பாலாஜி மற்றும் மலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.