காஞ்சிபுரத்தை அடுத்த திம்ம சமுத்திரத்தில் செவ்வாய்க்கிழமை ஏகாம்பரநாதர் பார் வேட்டை உற்சவம் நடைபெறவுள்ளது.
காணும் பொங்கல் தினமான ஜனவரி 16-ஆம் தேதி ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர், பார்வேட்டை உற்சவத்துக்காக திம்ம சமுத்திரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு ஏகாம்பரநாதர் கோயிலில் வீற்றிருக்கும் விகடசக்ர விநாயகர், ஏகாம்பரநாதர் ஆகிய மூலவர்களுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 8 மணிக்கு ஏகாம்பரநாதர் கோயிலிருந்து புறப்பட்டு திம்மசமுத்திரத்துக்கு செல்கிறார்.
புறப்பாட்டுச் சேவையின் போது, வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், சிறப்பு நாகஸ்வரம், டமாரம், பேண்டு வாத்தியம், மாக்கோலம், அலங்கார குடை, கோலாட்டம், காவடியாட்டம், பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு, உற்சவருக்கு 1008 லிட்டர் இளநீர், 27 லிட்டர் பன்னீர், 365 லிட்டர் பால், 108 லிட்டர் தயிர், 27 லிட்டர் தேன், 27 வகையான மலர்கள், 9 வகையான திரவியங்கள், 12 கிலோ சந்தனம், திருநீறு, 9 லிட்டர் எலுமிச்சை சாறு உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் ஏகாம்பரநாதருக்கு மகா அபிஷேகம் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆராதனை, பூஜைகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து மாலை புறப்பட்டு ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உற்சவர் வந்தடைவார்.