வனத்துறைக்கு சொந்தமான நல்லூர் காப்புக் காடு பகுதியில் வெட்டப்படும் தைல மரங்கள் அவ்வப்போது டிராக்டரில் ஏற்றிச் செல்லப்படுவதால் தமிழ்நாடு காகித ஆலைக்கு செல்கிறதா அல்லது கடத்தப்படுகிறதா என்ற கேள்வி அப்பகுதி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வனச்சரக எல்லைக்கு உள்பட்ட மண்ணூர், நல்லூர், ஒரகடம், வட்டம்பாக்கம், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக் காடுகள் உள்ளன.
குன்றத்தூர் ஒன்றியம், பூந்தண்டலம் ஊராட்சிக்கு உள்பட்ட நல்லூர் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் ஆயிரக்கணக்கான தைல மரங்கள் வளர்ந்துள்ளன. இந் நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு வீசிய வர்தா புயல் காரணமாக நல்லூர் காப்புக் காட்டில் உள்ள ஏராளமான தைல மரங்கள் புயல்காற்றில் சாய்ந்தன. சாய்ந்த தைல மரங்களை வனத்துறையினர் வெட்டி தமிழ்நாடு காகித ஆலைக்கு அனுப்பினர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நல்லூர் காப்பு காட்டில் வனத்துறை அதிகாரிகளின்றி, சுமார் 10-க்கும் மேற்பட்டோர் தைல மரங்களை வெட்டி டிராக்டரில் ஏற்றிச் செல்வதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், வனத்துறை அதிகாரிகள் இல்லாமலேயே சிலர் இப்பகுதியில் தைல மரங்களை வெட்டி டிராக்டர்களில் ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் உண்மையிலேயே தைல மரங்கள் தமிழ்நாடு காகிதத் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறதா அல்லது கடத்தப்படுகிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றனர்.