மணிமங்கலம் பகுதியில் லாரியில் கடத்தப்பட்ட 650 ரேஷன் அரிசி மற்றும் 100 கிலோ துவரம் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள உணவுப் பொருள் வாணிபக் கிடக்கில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் கோபி, மணிமங்கலம் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது மணிமங்கலம் பகுதியில் ரேஷன் கடையில் லாரியில் இருந்து உணவு பொருள்களை இறக்கி விட்டு, மீதம் இருந்த அரிசி மற்றும் துவரம் பருப்பை அருகில் இருந்த வீடு ஒன்றில் இறக்கி வைப்பதைப் பார்த்த வட்ட வழங்கல் அலுவலர் கோபி, இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமேஷுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டாட்சியர் ரமேஷ், கடத்தப்பட்ட ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 650 கிலோ அரிசி, 100 கிலோ துவரம் பருப்பை பறிமுதல் செய்தார். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு வந்து, காஞ்சிபுரம்-திருவள்ளூர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் லாரி ஓட்டுநர் உள்பட இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.