விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் நாளை தொடக்கம்

இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு முகாமானது தஞ்சையில் ஜூலை 23-இல் தொடங்குகிறது.

இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு முகாமானது தஞ்சையில் ஜூலை 23-இல் தொடங்குகிறது.
இந்திய விமானப்படையில் குரூப்-ஒய் பணிக்கு ஆள்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, ஏர்மேன் தேர்வு மையம் மூலம் தமிழகம், புதுச்சேரி பகுதியிலிருந்து திருமணமாகாத ஆண்கள் தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாம் ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
மேலும், 1998, ஜூலை 14- க்கு பின்பும், 2002-ஆம் ஆண்டு ஜூன் 26-க்கு முன்னரும் பிறந்திருத்தல் வேண்டும். அதன்படி, ஜூலை 23-ஆம் தேதி முகாமில், அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம். 
அதுபோல், ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ள முகாமில், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் கலந்துகொள்ளலாம். ஆள்சேர்ப்பு முகாமுக்கு வருவோர், கல்விச்சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்று, கல்விச் சான்றில் மாவட்டப் பெயர் குறிப்பிடாதோர், பிற மாநிலங்களில் கல்வி பயின்றோர் குடியுரிமை பெற்று சமர்ப்பிக்கவேண்டும். குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள விமானப் படை மையங்களில் பணிபுரியும் படைவீரர்களின் சிறார்கள் எஸ்.ஓ.ஏ.எஃப்.பி சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 
அதுபோல், குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் வாழும் முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் குறைந்தபட்சம் ஓராண்டு இருந்தமைக்கான சான்று, ஏ.எஃப்.ஆர்.ஓ-டி.ஏ.வி-ஆல் கொடுக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களின் படைவிலகல் புத்தக நகலை சமர்ப்பிக்க வேண்டும். 
எனவே, தகுதியுள்ள நபர்கள், முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திலும், www.airmenselection.gov.in  என்ற இணையதள முகவரி அல்லது co.8asc-tn@gov.in எனும் மின்னஞ்சல் முகவரி, 044-2239561, 22395553 (extn:7833) என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்லலாம் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com