உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை 250 கிராம் அளவுக்கு வழங்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்க ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.
உலத சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகமும் ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஹேண்ட்-இன்-ஹேண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அருகே இரண்டு பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சுமார் 250 கிராம் அளவிற்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை வழங்கும் பொதுமக்கள் 5 பேருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா கூறியதாவது:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பேருராட்சியில் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்கவும், அப்பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பெறுவதற்காக இரண்டு சேகரிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 250 கிராம் அளவிற்கு பிளாஸ்டிக் பொருள்களை வழங்கும் பொதுமக்களுக்கு தங்க நாணயம் வழங்க முடிவு செய்துள்ளோம்.
பொதுமக்களிடம் இருந்து வாங்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு ஹேன்ட்-இன்-ஹேன்ட் தொண்டு நிறுவனத்தின் சார்பாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு கயிறு திரித்து அதை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார் அவர்.