ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 248 மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பா.பொன்னையா அறிவுறுத்தினார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமிற்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 248 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உதவுமாறு சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மேலும் இம்முகாமில், தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறாத மாற்றுத்திறனாளி குடும்பத்தினர்களைக் கண்டறிந்து, அதில் 32 பேருக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன. 18 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக் குழு மூலம் பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அதோடு, இந்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால், காலிபர், ஊன்றுகோல், காதொலி கருவி ஆகிய உபகரணங்கள் வழங்கிட பயனாளிகள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைகால் வழங்குவதற்காக கால் அளவெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என அவர் தெரிவித்தார்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, துணை ஆட்சியர்கள் சுரேந்திரன், முத்துகழுவன், தனித் துணை ஆட்சியர் சக்திவேல், வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ப.முரளி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.