செய்யூர் அருகே நீர்நிலைகள், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார நீர்நிலைப் பகுதிகளில், அரசுக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகளைக் கட்டியுள்ளனர்.
இதுகுறித்து சோத்துப்பாக்கம் சமூக ஆர்வலர் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களிலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு, அரசுக்கு சொந்தமான இடங்கள் உண்மையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய செய்யூர் வருவாய்த் துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி செய்யூர் வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் காசிலிங்கம், கிராம நிர்வாக அதிகாரி சுதா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் சர்வே எண்கள் 157, 190 ஆகிய எண்களை கொண்ட குளம், ஏரிப்பகுதிகளில் நில அளவை செய்தனர். அதில் ஒருசிலர் கட்டடங்கள் கட்டியிருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்தது.
மேல்மருவத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.