காஞ்சிபுரம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தேஜஸ் (22), ரகு (26), லோகன் (18), நிக்கி (22), சென்னன் (19) ஆகிய 5 பேர் சென்னையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று விட்டு செவ்வாய்க்கிழமை காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை நிக்கி ஓட்டிச் சென்றார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் விழுந்தது.
இதில் காரில் இருந்த தேஜஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரகு, வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மேலும், நிக்கி, லோகன், சென்னன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை, பெங்களூரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.