தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் காவல் துறையினர் வியாழக்கிழமை ஆம்லா ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஒத்திகையின்போது, மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கோவளம், கேளம்பாக்கம், வெங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளில் வரும் பயணிகளின் உடைமைகளை சோதனையிடுதல், நடந்து வருபவர்கள், பேருந்துக்காக நிற்பவர்கள், கும்பலாக நிற்பவர்கள், சந்தேகத்துக்கிடமான வகையில் நிற்பவர்கள் உள்ளிட்டோரிடம் சோதனை செய்தல் ஆகிய பணிகளை போலீஸார் மேற்கொண்டனர்.
மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்பா ராஜூ தலைமையில், காவல் ஆய்வாளர்கள் சிரஞ்சீவி (மாமல்லபுரம்), ரமேஷ் (திருப்போரூர்), பாண்டி (கேளம்பாக்கம்), ராஜாங்கம் (தாழம்பூர்) , உதவி ஆய்வாளர்கள், மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும், ஆங்காங்கே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த திடீர் பாதுகாப்பு ஒத்திகையின்போது, பேருந்து பயணிகளின் பைகள் உள்ளிட்டவற்றை போலீஸார் சோதனை செய்யிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.