அண்டை மாநிலப் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து சேவை தொடங்க காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை, இதர பிற மாவட்டங்கள், வெளி மாநில மக்கள் அதிக அளவில் காஞ்சிபுரத்தில் குடியேறி, வசித்து வருகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து இதர மாவட்டத் தலைநகர்களுக்கும், அண்டை மாநிலப் பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, பண்டிகை, விழாக் காலங்களில் தொலைதூர வழித்தடங்களுக்கு பேருந்து வசதிகள் சொற்ப அளவிலேயே உள்ளன.
பெங்களூரூ, மைசூரு, உடுப்பி, பாலக்காடு, நெல்லூர், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட அண்டை மாநிலப் பகுதிகளுக்கு சென்று வரும் வகையில் காஞ்சிபுரத்தில் இருந்து நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட வேண்டும்.
அதேபோல், கோவை, ஈரோடு, பழனி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட தலைநகர் பகுதிகளுக்கும் புதிய பேருந்து வழித்தடம், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.