உத்தரமேரூர் பேரூராட்சியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் திறக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நல்லதண்ணீர் குளக்கரை அருகே உள்ள தூய்மை இந்தியா விழிப்புணர்வு பூங்காவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை வகித்து, குழந்தைகள் பயன்பாட்டுக்கு விளையாட்டுத் திடலினை திறந்து வைத்தார். இது குறித்து அவர் கூறியது:
உத்தரமேரூர் பேரூராட்சியில் மட்டும் 25 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்கன்வாடி மையக் குழந்தைகள் உட்பட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படும் வகையிலும் இந்த விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திடலில் விளையாட்டு மட்டுமின்றி யோகா, தற்காப்புக் கலை உள்ளிட்டவற்றை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏழை மக்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நவீன விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இந்தத் திடலுக்கு அழைத்து வந்து பாதுகாப்பான முறையில் விளையாட்டு மற்றும் மற்ற கலைகளை கற்பிக்கச் செய்யலாம் என்றார் அவர்.