கேளம்பாக்கத்தை அடுத்த படூரில் உள்ள பேராசிரியர் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறை சார்பில் "லைம்லைட்-2018' என்ற தலைப்பில் காட்சித் தொடர்பியல் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செயலர் புகழேந்தி தனபாலன் தலைமை வகித்தார். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், சென்னை நுண்கலைக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார், புணே தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சுதிர் சர்மா, பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரி சோனியா மன்சந்தா ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்துப் பேசினர். இயக்குநர் ஸ்ரீதேவி புகழேந்தி வரவேற்றார்.
இதில், புகைப்படம், ஓவியம், குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 27 கல்லூரிகள், 8 பல்கலைக்கழங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவர்கள் பல்வேறு அரிய வகை புகைப்படங்கள், சமூக அவலங்கள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்த ஓவியங்கள், படித்த மாணவர்களின் கனவு, புகைக்கு எதிரான கருத்துகள் கொண்ட குறும்படம் உள்ளிட்டவற்றை அளித்தனர். அவற்றில் சிறந்தவற்றை சிறப்பு அழைப்பாளர்கள் தேர்ந்தெடுத்தனர். சிறந்த புகைப்படம் மற்றும் ஓவியங்களை அரசு கலைக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் நடுவராக இருந்து தேர்வு செய்தார். போட்டிகளில் வென்றவர்களுக்கும், குழுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.