நகரில் உள்ள வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 11ஆவது மாணவர் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு வேதநாராயணபுரம் பகுதியில் அமைந்துள்ள வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் குளோபல் பள்ளியின் 11ஆவது மாணவர்களுக்கான விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் காங்கரியா, இயக்குநர் பி.ஜி.ஆச்சாரியா, பள்ளி முதல்வர் ச.கல்பனாபிரியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர் ஷா.அஃப்ராஸ் ஜவஹர் வரவேற்றார். தலைமை விருந்தினராக சென்னை ஸ்ரீபி.எஸ்.மேத்தா மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுதா மாலினி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றனார். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், கண்கவரும் மாணவர்களின் கூட்டு உடற்பயிற்சிகள், மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர் சுதாமாலினி பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினர். முடிவில் மாணவி சு.யாழினி நன்றி கூறினார்.