செல்லம்பட்டிடை கிராமத்தில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி திங்கள்கிழமை நிதியுதவி வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செல்லம்பட்டிடை கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. கூலித் தொழிலாளியான அவர் குடிசை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முரளியின் குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடிசை வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பழனி, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர், முரளியின் குடும்பத்தினரை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி மற்றும் இலவச வேட்டி, சேலை, அரிசி ஆகியவற்றை வழங்கினர். அப்போது, அதிமுக நிர்வாகிகள் சிங்கிலிப்பாடி ராமச்சந்திரன், செல்லம்பட்டிடை சிவசக்தி, அக்பர் அலி, வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.