தமிழில் கையொப்பமிட வலியுறுத்தி ஆட்சியரிடம் மக்கள் பாதை இயக்கத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வழிகாட்டுதலில் மக்கள் பாதை அமைப்பு தமிழுக்கு அமுதென்று பேர் திட்டம் சார்பில் தமிழில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, தாய்மொழியாக தமிழைக் கொண்ட அனைவரும் தங்களின் பெயரையும், முன்னெழுத்தையும் தமிழிலேயே கையெழுத்திட வலியுறுத்துகிறது. ஆங்கில மொழியானது, தமிழர்களை மொழியால், உணர்வால், எண்ணத்தால் அடிமைப்படுத்துகிறது. இதனை மாற்றிடவே இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். எனவே, அரசுப் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிடவேண்டும் என 1978 அரசாணை வலியுறுத்துகிறது. ஆனால், இதனை அரசு ஊழியர்கள் பொருட்படுத்துவதில்லை.
இந்நிலையில், மாவட்ட அரசு அலுவலகங்களில் பதிவேடுகள், கடிதங்கள், ஆணைகள், காலமுறை அறிக்கைகள், நாட்குறிப்புகள், பலகைகள், முத்திரைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழிலேயே அமைதல் வேண்டும். இதையொட்டி, தமிழில் கையொப்பமிட வேண்டும் எனும் அரசாணையை நடைமுறைப்படுத்த மாவட்டநிர்வாகம் ஆணை பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.