ஊரப்பாக்கம் அருகில் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி மீது மணல் லாரி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஊரப்பாக்கத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி கண்மணி ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.
அவர்களுக்கு சரண்யா (19), கிருபா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களில் சரண்யா சென்னை கிண்டியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2ஆம் ஆண்டு படித்துவந்தார். அவர் ஆதனூர் கிராமத்தில் இருந்து தனது சைக்கிளில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து ரயிலில் பயணித்து கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், அவர் திங்கள்கிழமை காலையில் தனது சைக்கிளில் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மண்ணிவாக்கம் அண்ணா நகர் அருகில் சென்றபோது பின்னால் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி அவர் மீது மோதிது. இதில் சரண்யா சைக்கிளுடன் கீழே விழுந்து, லாரி சக்கரத்தின் இடையில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து அந்த வழியாக வந்த 7 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து தகவலறிந்த ஓட்டேரி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த லாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
அதன் பின், சரண்யாவின் சடலத்தைக் கைப்பற்றி சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.