கோவையில் செய்தி, விளம்பரத் துறை சார்பில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) தொடங்குகிறது.
கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆண்டுதோறும் அரசுப் பொருள்காட்சி நடத்தப்படும். இந்தப் பொருள்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 45 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெற உள்ளது. கண்காட்சியின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர்.
தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 27 அரசுத் துறைகளின் அரங்குகள், தமிழ்நாடு உப்புக் கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரிசர்வ் வங்கி, ஆவின், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள், தனியார் அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை இடம் பெற உள்ளன. கண்காட்சி வளாகத்தில் தினசரி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.