டெங்கு காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் 42 பேருக்கு சிகிச்சை
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் 42 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 194 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி தொற்று காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திரளானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு 42 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 194 பேருக்கு சிகிச்சை:
தற்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துமனையில் 42 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு கோவையைச் சேர்ந்த 141 பேரும், திருப்பூரைச் சேர்ந்த 41 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 9 பேரும், சேலம், நீலகிரி மற்றும் பழனியைச் சேர்ந்த தலா ஒருவரும் என 194 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதேபோல, தனியார் மருத்துவமனையிலும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த எட்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது, சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு மட்டும் சில தினங்களாக 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர்ச்சத்து குறைவு காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.