யானைகள் குடிசைக்குள் நுழைந்ததையடுத்து அதில் வசித்து வந்த தம்பதி தப்பியோடினர்.
காரமடையை அடுத்த தோலம்பாளையம் பகுதியில் உள்ள கஞ்சிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மார்க் கந்தசாமி. இவரது மனைவி கிருபா சரோஜா. இருவரும் அப்பகுதியில் அவர்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தம்பதியினர் வழக்கம்போல் பணிகளை முடித்து விட்டு தங்கள் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில், அருகில் உள்ள வனப் பகுதியிலிருந்து உணவு, தண்ணீர் தேடி வந்த இரண்டு யானைகள், அங்கிருந்த குடிசையை முட்டித், தள்ளி நொறுக்கின. பின்னர் தும்பிக்கையை உள்ளே விட்டு தானிய மூட்டைகளை மட்டும் உருட்டி சென்று தானியங்களை தின்றுள்ளன.
யானைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து தப்பியோடிய தம்பதி, அக்கம்பக்கத்தினர் காரமடை வனச் சரக அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்துகு வந்த வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் வெடிகள் வெடித்து, யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.