நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை, தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் சுந்தரராஜு தலைமையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, அக்கட்சியின் நிறுவனர் ஜான் பாண்டியன் கூறியதாவது:
நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்க அளிக்க மத்திய அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதிமுக கட்சியில் நிலவும் உள்கட்சி பிரச்னையால் மக்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார்.