கடந்த இரு மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 1, 100 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு மாநகர போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
கோவை மாநகரில் விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலும் சிலர் வாகனத்தை அதிவேகமாக இயக்கி வருகின்றனர். அதேவேளையில், மது போதையில் வாகனத்தை அதிவேகமாக இயக்குவது, செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனத்தை இயக்குவது போன்ற போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்படுபவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்கிய 1,100 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்துக் காவல் துறை சார்பில் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சம்மன் அனுப்புவர். அவ்வாறு நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்காதவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.