பஞ்சாலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த ஒப்பந்தம் ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிஐடியூ கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பேரவைக் கூட்டம் கோவை காந்திபுரத்தில் மாவட்டத் தலைவர் வி.கே.மனோகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.
பஞ்சாலை சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.பத்மநாபன் வேலை அறிக்கை குறித்து உரையாற்றினார். வரவு, செலவு அறிக்கையை பொருளாளர் என்.ராமமூர்த்தி முன்வைத்தார். தொடர்ந்து, சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தலைவராக சி.பிரான்சிஸ்சேவியர், பொதுச் செயலாளராக சி.பத்மநாபன், துணைப் பொதுச் செயலாளராக பி.ராஜேந்திரன், பொருளாளராக என்.ராமமூர்த்தி உள்ளிட்ட 13 நிர்வாகிகள், 28 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியூ மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
இதில், 15 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கான தொழில்ரீதியான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை மாநில அரசு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.