இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வெள்ளாணைபட்டி ஊராட்சி, செரயாம்பாளையம் பகுதி மக்கள் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், வெள்ளாணைபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட செரயாம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் வெளியூர்காரர்களுக்கு கடந்த 3-ஆம் தேதி வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் அதே பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகள் இல்லாமல் பலர் ஒரே வீட்டில் கூட்டு குடும்பங்களாக வசித்து வருகிறோம்.
எனவே, செரயாம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தை அதே பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னூர் வட்டாட்சியர் இல்லாததால் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்து சென்றனர்.