கோவையில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை, காட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை முயற்சி மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுவந்தன.
இதில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க காவல் ஆணையர் பெரியய்யா, உத்தரவின்பேரில், குற்றப் பிரிவு துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில், உதவி ஆணையர் சோமசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி, பாரதி நகரைச் சேர்ந்த பெருமாள் (57), அவரது மகன் தஷ்மந்த் ஜனித்தன் (23) ஆகியோர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கிராஸ்கட் சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்திலும் அவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.