வால்பாறை நகர் பகுதியில் சுற்றித் திரிந்த நாயைக் கொன்ற சிறுத்தை, அதன் உடலை வியாழக்கிழமை மரத்தின் மீது வைத்துச் சென்றது.
வால்பாறை நகர் பகுதிக்கு இரவு நேரங்களில் உணவைத் தேடி சிறுத்தை வந்து செல்கிறது. அங்குள்ள சில கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் இரவு நேரத்தில் வாழைத் தோட்டம் பகுதியில் திரிந்த நாயை சிறுத்தை பிடித்துச் சென்றது. மறுநாள் நாயின் உடலை அப் பகுதியில் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை ஸ்டோன்மோர் சந்திப்பு சாலை அருகில் உள்ள மரத்தில் நாயின் உடல் இருப்பதைப்
பார்த்த ஒருவர் வனத் துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த வனத் துறையினர் நாயின் உடலை மரத்தின் மீது சிறுத்தை வைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது.