கோவை பொம்மணம்பாளையம் அரசுப் பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பிரிக்கால் அணி வெற்றி பெற்றது.
கோவை, யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சார்பில், சமூக சேவைக்கு நிதி திரட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு இடையே ஆண்டு தோறும் யுனைடெட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சரவணம்பட்டி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
6 ஓவர்கள் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டியில் 16 தனியார் நிறுவனங்களின் அணிகள் பங்கேற்றன. போட்டியைக் கல்லூரித் தாளாளர் சங்கர் வாணவராயர் தொடக்கிவைத்தார். தரணி பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் வித்யாதரன், ரவுண்ட் டேபிள் இந்தியா ஏரியா 7-இன் தலைவர் அமோள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் பிரிக்கால், சர்ப்ரைஸ் பர்னிச்சர் அணிகள் மோதின. இதில், சூப்பர் ஓவர் அடிப்படையில் பிரிக்கால் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டி மூலமாகத் திரட்டப்பட்ட ரூ. 30 லட்சம், பொம்மணம்பாளையம் அரசுப் பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கட்டுவதற்கும், வசதி வாய்ப்பற்ற விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும் செலவிடப்படவுள்ளதாக ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.