கோவை ரயில் நிலையத்தில் பொறியாளரிடம் செல்லிடப்பேசி திருடிய இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது:
சென்னையைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பொள்ளாச்சி செல்வதற்காக சென்னையில் இருந்து டிசம்பர் 9-ஆம் தேதி கோவை ரயில் நிலையம் வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பயணிகள் வரவேற்பு அறையில் தனது செல்லிடப்பேசிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது சில நிமிடங்களிலேயே அவரது செல்லிடப்பேசி மாயமானது. இதுகுறித்து கோவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரயில் நிலைய நடைமேடையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் செல்லிடப்பேசி திருடியவரின் உருவம் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், அதே நபர் புதன்கிழமையும் இரண்டாவது நடைமேடையில் நின்று கொண்டிருப்பது கண்காணிப்பு கேமரா மூலமாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவர் குறிச்சி ஹவுஸிங்யூனிட் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.