தமிழக மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
திருப்பூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னைக்கு காரணம் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான். தற்போது, அந்த இரு கட்சிகளும் நீலிக் கண்ணீர் வடிப்பதை ஏற்க முடியாது. தமிழகத்துக்குத் தேவையான பொறியியல், மருத்துவ மாணவர்களை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு அனைத்து அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது.
நீட் விவகாரம் தற்போது நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் மத்திய அரசிடம் வலியுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்தப் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும். தமிழக மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க அதிமுக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
அதிமுகவில் ஒரே அணிதான் உள்ளது. ஆனால், பல அணிகள் இருப்பதாக ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன. அதிமுகவில் அனைத்து நிர்வாகிகளும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆட்சியில் தவறுகள் இருந்தால் அவர் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்றார்.