துடியலூர் அருகே பன்னிமடையில் உள்ள பழமையான தர்மராஜர் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நூற்றாண்டு பழமையான இக்கோயில் புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக் குடங்கள், முளைப்பாலிகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடந்த யாக வேள்விகளில் சின்னவேடம்பட்டி, கெளமார மடாலய பீடாதிபதி குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் தொடங்கியது. நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று புனித தீர்த்த கலசங்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஊத்துக்குளியைச் சேர்ந்த சரவண மாணிக்க சிவாச்சாரியார், பன்னிமடையைச் சேர்ந்த தண்டபாணி சிவாச்சாரியார் ஆகியோர் கோபுரக் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.