கோவை மாநகரில் போக்குவரத்தை சீரமைக்க போலீஸாராலேயே இயக்கக் கூடிய வகையில் 18 சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கருவி திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 56 சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களில் தலா 4 கேமராக்கள் வீதம் 214 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகரின் முக்கியப் பகுதிகளான அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, கணபதி சாலை போன்ற பகுதிகளில் உள்ள சிக்னல்கள் தானியங்கி முறையில் தற்போது இயங்கி வருகின்றன.
இதனால், ஒருபுறம் சிக்னலில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு முன்பாகவே அனைத்து வாகனங்களும் சென்று வீட்டாலும், போக்குவரத்து போலீஸாரால் சிக்னல்களில் மாற்றம் செய்ய இயலாது.
ஆகவே, தானியங்கி சிக்னல்களுடன், பணியில் உள்ள போலீஸாரே தேவைக்கேற்ப போக்குவரத்து சிக்னலை இயக்கும் வகையில் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் பங்களிப்புடன் காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் முதல் சிட்ரா வரையில் 18 சிக்னல்களில் இக்கருவி பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.
இப்பணிகள் நிறைவடைந்து ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை முதல் 18 சிக்னல்களில் இக்கருவி இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: சிக்னல்களை தானியங்கி முறையில் இயங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை வாகனங்கள் அதில் கடந்து செல்ல முடியும். சில நேரங்களில் குறைந்த அளவிலான வாகனங்கள் கடந்த சென்ற பின்னரும், தானியங்கி சிக்னல் கருவிக்கான நேரம் முடியும் வரை மற்ற சிக்னல்கள் இயங்குவதில்லை. சிக்னலுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசலும், கால விரயமும் ஏற்பட்டு வந்தது.
இந்தச் சமயங்களில் அங்குள்ள போக்குவரத்து போலீஸாரால் சிக்னலை மாற்ற முடியாது. இந்தப் புதிய கருவி மூலம் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப சிக்னல்களை மாற்ற முடியும். அதிலும், குறிப்பாக ஆம்புலன்ஸ் வருகையின்போது, சிக்னல்களை மாற்றி அவை மட்டும் செல்ல அனுமதிக்க முடியும் என்றார்.