கரூரில் இருந்து பொள்ளாச்சி வழியாக நூதன முறையில் கேரளத்துக்கு மணல் கடத்திய இருவரை ஆனைமலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் எல்லைக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியைச் சோதனையிட்டனர். அப்போது, அந்த லாரியில் சாம்பல் ஏற்றிச் செல்வதாக அதன் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த லாரியை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று நடத்திய சோதனையில் சாம்பல் மூட்டைகளுக்கு இடையே கரூரில் இருந்து கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநரான கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்த ரியாஸ் (27), உதவியாளர் நஜீத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், லாரி மற்றும் 21 டன் மணலையும் ஆனைமலை போலீஸார் பறிமுதல் செய்தனர்.